யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

உயிரின் விலை

Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூலை 09, 2013



                      தூக்க கலக்கத்தில், காலையின் முதல் கடமையாக தங்கமணியை அலுவலக பேருந்து ஏற்றிவிட்டு க்குள் திரும்பிக்கொண்டிருந்தேன். எப்போதும் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் பூனையொன்று வாயில் எதையோ கவ்விக்கொண்டு காருக்கு அடியில் பதுங்கியது. சாதரணமாய் இருந்தால் கண்டுகொள்ளாமல் சென்றிருப்பேன், ஆனால் சட்டென ஒரு நொடி  பதறி நின்றதற்கு காரணம் அதன் வாயில் இன்னும் துடித்துக்கொண்டிருந்த சிறகு.

                    டிஸ்கவரி அலைவரிசையில் எத்தனையோ முறை இந்த காட்சியை, வெவ்வேறு மிருகங்கள் version-இல் உணர்ச்சியே இல்லாமல்  பார்த்திருந்தும் இன்று நேரில் கண்டதும் ஏனென்று தெரியவில்லை, ஒரு நொடி பதறிவிட்டேன்.

                   'ஓநாய் பார்வையில் நியாயம், மானின் பார்வையில் நியாயம்.. ' என்றெல்லாம் சினிமா வசனங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. என்னதான் நடக்குதுனு பார்க்கலாமா, எனக்கு ஏனிந்த குரூரம், பூனையை விரட்டி புறாவை காப்பாத்தலாமா, பூனை பசிக்குதானே பிடிச்சிருக்கு, இப்போ புறாவை காப்பாத்தி அது பறக்க முடியாம துடிச்சு சாகனுமா... ஏகப்பட்ட கேள்விகள், தயக்கம். பூனை பதுங்கியிருந்த காரை சில அடிகள் கடந்துவிட்டிருந்தேன், ஆனால் திரும்பி ஓடிவந்து பட படவென்று கால்களை தரையில் உதைத்து பூனையை விரட்டிவிட்டேன்.

                    சிறகுகள் அடித்துக்கொண்ட ஓசை மட்டும் கேட்டது, காரைச்சுற்றிச்சுற்றி வந்து குனிந்து பார்த்தேன், பார்க்கிங்கையும் சுற்றிப்பார்தேன் பூனையும் கண்ணில் தென்படவில்லை, சிறு நம்பிக்கையோடு அண்ணாந்து பார்த்தேன் புறாவையும் காணவில்லை.

                  லிப்ட் கீழே வருவதற்கு காத்திருக்கும்போது எனக்கு நானே கிள்ளிப்பார்த்துக்கொண்டேன், இது கனவுமில்லை.




வெறுமை

Published by யாத்ரீகன் under , on திங்கள், மே 27, 2013


                 நான்கு பத்து நாட்களுக்கு முன் திறந்துவைத்த இந்த Compose window -வும் வெறுமையாகவே காலத்தை கடத்திக்கொண்டிருந்திருக்கின்றது. உதற உதற ஒட்டிக்கொள்ளும் கடல் மணலைப்போல, என்னவென்று சொல்லவியலாத வெறுமை மனதில் ஒட்டிக்கொண்டுள்ளது. பார்க்க நினைத்த படங்களை துவங்கிய சில நிமிடங்களிலேயே மூடிவிட்டேன், படித்துக்கொண்டிருந்த 'நெடுங்குறுதி'-யும் வாலற்ற பட்டத்தைப்போல, துன்பங்களிடையையே உழலும் மாந்தர்களைப்பற்றியே சுற்றிக்கொண்டிருந்தது, புது வீட்டிற்கான வேலையிலும் அத்தனை ஆர்வமில்லை.. இப்படி எல்லா திசையிலும், பல பெயரிடப்பட்ட எதோவென்று மனதை அழைக்கழித்துக்கொண்டேயிருந்தது.

               புகைப்படங்களோ, சமையலோ, பயணங்களோ, பாடல்களோ, அரசியலோ, திரைப்படங்களோ, வாசிப்போ ...  வேலைக்காகவோ, வாழ்வுக்காகவோ, பொழுதுபோக்குக்காகவோ எல்லோரும் தனக்கு பிடித்ததான ஏதோ ஒன்றை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவ்வப்போது இவைகளில் ஈடுபட்டிருக்கும் நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என கடந்து செல்லும்போது ஏதோ ஒரு பாரம் மனதை அழுத்திக்கொண்டிருக்கும். எந்த இலக்கை நோக்கி போகிறோம் என்ற அறியாமை மேலும் மேலும் மனதை அழுத்திக்கொண்டேயிருந்தது.

              தவறவிட்ட, உறுதியாய் தேர்வு செய்யாத, நிலையாய் இருந்திடாத..என கடந்து சென்ற அத்தனை வாழ்வின் வாய்ப்புகளும் நினைவில் மறுபடியும் சுழன்று எரிச்சலை கூட்டிக்கொண்டிருந்தது. நல்லவேளை, சுயபச்சாதாப குழிக்குள் மட்டும் இறங்கவேயில்லை.

            சுற்றி இருந்தவர்களிடம் எதையும் வெளிப்படுத்திக்கொள்ளும் மனநிலையிலும் இல்லை, இதை புரிந்து கொள்வாளா என்ற ஐயமும் சேர்ந்துகொள்ள, அவளிடமும் இதை காட்டிக்கொள்ளவில்லை.

            இந்நேரம் பார்த்தா உடல் வலியும் சேர்ந்துகொள்ளவேண்டும் ? கழுத்தையும், தோள்பட்டையையும் கழற்றி, overhauling செய்ய கொடுத்துவிடலாமவென எண்ணுமளவுக்கு வலி. அழைக்கழித்துக்கொண்டிருந்த மனதை 'வலியின் மீதே' ஒருமுகப்படுத்திக்கொடுத்தது என்று சொல்லுமளவுக்கு வலி.        

           போதும் என்றபோதுதானே நிறைந்து வழியும். இந்த குழப்பங்களுக்கிடையே, சுற்றியிருப்பவர்களுக்கு தைரியமும், வாழ்வின் ஒரு மிகவும் மோசமான கட்டத்தை கடந்து வரவேண்டி  ஒரு கை தரவேண்டிய நிலையில் நான் நின்றது என்னவிதமான design-ஓ.

           ஒருவிதமான தனிமையை நாடத்துவங்கியிருந்தேன். மின்னஞ்சல், புத்தகம், சமூக வலைத்தளம், படங்கள், நண்பர்கள் என எல்லாவற்றையும் விட்டு விலகியிருந்தேன். புதிய முயற்சிகள், சிந்தனைகள், வாசிப்புகள் ஏதும் இல்லாமல், எளிய சிந்தனை கொண்டவனாய் சில நாட்கள். என் நிறை, குறைகளனைத்தையும் ஒப்புக்கொண்டு, ஆமாம் இதுதான் நான் என அமைதியாகிக்கொண்டிருந்தேன். அவ்வப்போது, இப்படி ஒப்புக்கொள்வது தோல்வி இல்லையா ? வாழ்வை சுவாரசியமில்லாமல் ஆக்கிவிடுமல்லவா என மனக்குரல்கள் கேட்காமலில்லை, ஆனால்ஒரு தெளிவு கிடைக்கும்வரை எதையும் கண்டுகொள்வதில்லையென ஒரு முடிவு.

           அவ்வப்போது 'இலக்கில்லா அம்புகளின் வலி யாருக்கு புரியும்' என மடக்கி மடக்கி எழுதும் கவிதைபோன்றவைகளும் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

          முடிவெடுத்துவிட்டேன் என இறூமாந்திருக்கும்போதுதானே அதை அசைத்துப்பார்க்கும் நிகழ்வுகளெல்லாம் நடக்கத்துவங்கும். அதே எனக்கும் தொடர்ந்தது. தவறவிட்டிருந்த வாய்ப்புகளையும், சரியாய் பயன்படுத்தாதவைகளையும் அசைபோடத்துவங்கினால், எல்லாமே சிறிது முன்னமே கிடைத்தவைகளாக இருந்திருக்கிறது. அந்த வாய்ப்புகளின் அருமை தெரியாமல் வீணடித்திருக்கிறேன் அல்லது மொத்தமாக அலட்சியப்படுத்தியிருக்கிறேன்.

           புயலின்போது அமைதியையும், அமைதியின்போது புயலையும் நினைத்து, அந்தந்த நேரத்துக்கான சுவாரசியத்தையும், அழகையும் இரசிக்க இயலாத வாழ்க்கைதான் வாய்த்திருக்கிறதுபோலானது.

            ஒருவழியாய் புயலுக்குபின்னான அமைதி வந்ததுபோல இருக்கின்றது. எதைக்கண்டாலும் புலம்பும், அலைபாயும், ஏக்கப்படும் மனது இப்போது ஒரு தீர்க்கமான அமைதியடைந்திருக்கிறது. இதிலேயே இருக்க விருப்பமில்லை, ஆனால் ஒரு தூர ஓட்டத்துக்குப்பின்னும், அடுத்த ஓட்டத்திற்கு முன்னுமான இடைப்பட்ட அமைதியும், ஓய்வும்போல ஒரு நிலை என எனக்கு நானே ஒப்புக்கொண்டு அமைதியடைந்திருக்கிறேன்.

              விளையாட்டின் அடுத்த சுவாரசியமான கட்டமே இனிமேதான் ஆரம்பிக்குது என்று கொஞ்சம் கொஞ்சமாய் ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். புத்துணர்ச்சி நிறைந்து வந்திருக்கிறேன்.



வாழ்வின் மிச்சம்

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், ஏப்ரல் 16, 2013


                     சூடான சாதத்தோடு எலுமிச்சை பழத்தை பிழிந்து, பிசைந்து கொண்டிருக்கையில் பாதியில் அம்மா நகர்ந்தபோது, குளிக்க போன நான், அம்மா பார்க்கும்முன் அவசர அவசரமாய் ஒரு விள்ளல் சாதத்தை எடுத்து, சூடு தாங்காமல் உருட்டி வாயில் போட்டுக்கொண்டு விலகினேன்.

                    கொஞ்சமும் உப்பேயில்லையென எரிச்சல்படத்துவங்குகையில், மெல்ல எலுமிச்சையின் புளிப்பு படரத்துவங்குகிறது, அந்த சுவையை இரசிக்கத்துவங்கி சில நொடிகளில் கரைந்த உப்பின் சுவை. மென்றுகொண்டேயிருக்கையில், சிறு பச்சை மிளகாய்த்துண்டொண்று பல்லிடுக்கில் அரைந்துவிட, அவசர அவசரமாய் காரம் பரவுகிறது. புளிப்பும் காரமும் கலந்து புலன்களை சுழற்றி அடிக்கின்றது. இந்த உணவு இத்தனை சுவையா ? கொஞ்சம் கூட பிடிக்காத உணவான (உப்புமாவை நான் உணவாகவே கருதுவதில்லை) எலுமிச்சை சாதம் இவ்வளவு சுவையை  விட்டுச்சென்றதேயில்லை. மற்ற நாட்களுக்கும் இன்றுகும்மான வேற்றுமை, எந்த சுவையும் கண்டிராத,  தூக்கத்திலிருந்து எழுந்த நாக்காவென தெரியவில்லை.

                   காலையில் Indian Express பத்திரிக்கை நிருபர்களின் தரம் திரு. P.B.சிரினிவாஸ் அவர்களின் மரணச்செய்தியில் பல்லிளித்துக்கொண்டிருந்தது. திடீரென அவளைக்கண்டு 'காலங்களில் அவள் வசந்தம்... ' என காதல் பொங்க பாட ஆரம்பித்தேன். வெட்கத்தை மறைக்க முடியாமல் சிரித்துக்கொண்டே என்னாச்சு என்றாள். எத்தனை பேருக்கு இப்படியான அருமையான நினைவுகளை உருவாக்கித்தந்திருப்பார். எங்கோ FMயில் 'அவள் பறந்து போனாளே...' என்று பாடிக்கொண்டிருந்தார். எத்தனை இளைஞர்களின் இனிமையான, மோசமான தருணங்களில் துணைக்கிருந்திருப்பார்.

                 மரணம் அவரை தன் துணைக்கு அழைத்துக்கொண்டபொழுது 82 வயதென்று படித்தேன், அவ்வப்போது கேட்ட/படித்த அவரை சந்தித்தவர்களின் அனுபவமும், நல்ல வாழ்வு வாழ்ந்திருக்கிறார் என சிறு நிம்மதியைத்தந்தது. இறந்துவிட்டார் என்ற துக்கம் என்பதைவிட, எவ்வளவு பேரின் நல்ல நினைவுகளுக்கு காரணமாயிருந்திருக்கிறார் என்பது போன்ற எண்ணங்களே இருந்தன. வாழ்ந்துவிட்ட அவரின் முதுமையா, மரத்துப்போன என் மனதா, சுயநலமான ஆசைகளுடனே வாழத்துவங்கிவிட்ட என் இயந்திர வாழ்க்கையா.. வராத கண்ணீருக்கும், வருத்தப்படாத மனதுக்கும் எது காரணமென யோசித்து களைத்துப்போனேன்.

                ஆனால் அவரின் மரணச்செய்தி wikipedia-விலிருந்து copy-paste செய்யப்பட்டு, வேறொருவடன் குழப்பிக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த அவசர வாழ்வில் மரணத்துக்கான மரியாதை. இதைவிட, அவருக்காக சிந்தப்படும் கண்ணிரைவிட, இன்று முழுவதும், அவரின் பாடல்கள் கேட்டு மனமெங்கும் பரவிய மகிழ்ச்சியே அவருக்கான மரியாதை.

                     இதோ, இதை தட்டச்சிக்கொண்டிருக்கையில் மறுபடியும் 'காலங்களில் அவள் வசந்தம்.. " பாடல் கானாபிரபாவின் ரேடியோஸ்பதியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

                   

TOGAF Prep Material

Published by யாத்ரீகன் under , , , on செவ்வாய், மார்ச் 12, 2013


                      The TOGAF training at work gave us 'Student Guide Volume' books, an abridged version of the TOGAF Specification from The Open Group. After reading through them, i wanted to have a cheat-sheet (a more abridged version), where i could refer the complete spec within 10 pages.

        I ended-up creating 2 cheat sheets, one for each of 'Student Guide Volume I & II'.

TOGAF9_CheatSheet_Part_1.pdf
TOGAF9_CheatSheet_Part_2.pdf

       But still, i wasn't satisfied. I wanted an even more abridged version, like a 1 Pager, where i could quickly re-collect all the Input/Outputs of all Phases. And hence made this 1 pager in Visio.

TOGAF_ADM_Input_Outputs.pdf

        Indeed, they all came very handy on the day before exam & during the day of exam (of-course not during the exam :-). The thought of sharing this with a wider audience resulted in this blog. I hope people looking forward for their Foundation & Certification exam might find this handy.

        Thanks to Fite Klub for the idea to create cheat-sheets.

        Please feel free to point out any mistakes to be corrected or additions to be done in these documents.

Disclaimar: This is a document created for my personal use for the purpose of studying. There is no intention of violating any copyright. And please use it with your own discretion.