யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

இனிய இரவு

Published by யாத்ரீகன் under on வெள்ளி, செப்டம்பர் 04, 2015
மாலையில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்பொழுது, அவள் என்றும் தூங்கும் நேரத்தைவிட அரைமணிநேரம் அதிகமாகிவிட்டது. சில நிமிடங்கள் தாண்டினாலே சிணுங்குபவள் அழத்துவங்கிவிட்டாள். அம்மாவைத்தவிர யாரிடமும் நிற்கவில்லை. வெளியே சென்ற இடத்திலும் , அம்ம்ம்... அம்ம்ம்.. அம்ம்ம்... என அவளிடமே ஒட்டிக்கொண்டிருந்தாள்.

ஒருவழியாய் மருந்து, பால் எல்லாம் கொடுத்து, விளக்கணைத்து, அவள் தூங்குவதற்கான சூழலை உருவாக்கி எங்கள் நடுவே படுக்கவைத்ததும், அம்மா பக்கம் உருண்டுபோய் அவள் கழுத்தை அந்த சின்னஞ்சிறு கைகளால் வளைத்து கட்டிக்கொண்டாள். 

சில நிமிடங்கள்தான், என்ன நினைத்தாலோ தெரியவில்லை, என் மனதில் ஒரு நொடி மின்னி ,மறைந்த ஏக்கத்தை உணர்ந்ததைப்போல என் பக்கம் உருண்டு வந்து என் கழுத்தையும் அந்த பிஞ்சுக்கரங்கள் கட்டிக்கொண்டன. எப்படி உணர்ந்தேன் என உவமை சொல்வதற்கு இதற்கிணையாய் வேறேதும் கண்டதுமில்லை, உணர்ந்ததுமில்லை.

இந்த உணர்விலிருந்து வெளியே வருவதற்குள், மீண்டும் அம்மா பக்கம் உருண்டுபோய் கட்டிக்கொண்டாள். என்னடா இது சோதனை என நினைக்கத்துவங்கும்வேளையில், மீண்டும் என்னிடம். இதை ஒரு விளையாட்டைப்போல மாறி மாறி உருண்டு, இருவர் கழுத்தையும் கட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தாள்.

அப்பாவிடம் ஒட்டவேயில்லையே என்றிருந்த மிகச்சிறிய ஏக்கத்தோடு முடியவிருந்த இந்த இரவு, இதற்குமேல் இனிமையானதாக அமைந்துவிடாது...

0 மறுமொழிகள்:

கருத்துரையிடுக